அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

வள்ளலாரின்

உபதேசப் பகுதி

 


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

2. சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய

ஜீவகாருண்ய ஒழுக்கம்
முதற் பிரிவு

ஜீவகாருண்ய
ஒழுக்கம் : பகுதி - I

ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள்
வழிபாடு
 உலகத்தில் மனிதப்பிறப்பைப்
பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக்
காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.

அந்த ஆன்மலாபம் எதுவென்று
அறியவேண்டில்:-

எல்லா அண்டங்களையும், எல்லாப்
புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் ஜீவர்களையும், எல்லா
ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய
அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய
கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும்,
எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால்
அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்
.

இயற்கை இன்பத்தைப் பெற்றுத்
தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரியவாழ்வை எதனால் அடையக்கூடுமென்று
அறியவேண்டில்:- 

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்று அறிய
வேண்டும்.

கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:-

ஜீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடும் அல்லது வேறு எந்த
வழியாலும் சிறிதும் பெறக்கூடாது
 என்று
உறுதியாக அறிதல் வேண்டும்.

கடவுள் அருளைச் ஜீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடா தென்பது எப்படி
என்னில்:-

 அருள் என்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம். ஜீவகாருணிய
மென்பது ஜீவர்கள் தயவு, ஜீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக்
கொண்டு தயவைப் பெறுதலும்
 விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப்
பெறுதலுங் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், ஜீவகாருணியத்தைக் கொண்டு அருளைப்
பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம்
வேண்டாமென்றறிய வேண்டும்.

அருளைப் பெறுவதற்குச் ஜீவகாருணியமே
வழியாதலால், ஞான
வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் ஜீவகாருணிய
ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் ஜீவ
காருணிய ஒழுக்கம் இல்லாமை
 
என்றும் அறியப்படும்.

ஜீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக
நின்று விளங்கும்
; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால்
எல்லா நன்மைகளுந் தோன்றும்.

ஜீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால்
உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்
.

ஆகலின் புண்ணிய மென்பது ஜீவகாருணியம்
ஒன்றே என்றும்,
பாவம் என்பது ஜீவகாருணியம் இல்லாமை ஒன்றே
 
என்றும் அறியப்படும்.

ஜீவகாருணிய ஒழுக்கத்தினால்
வரும் விளக்கமே – கடவுள் விளக்கமென்றும், ஜீவகாருணிய ஒழுக்கத்தினால்
வரும் இன்பமே – கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும்
பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே ஜீவன் முத்தரென்றும்,
அவர்களே கடவுளை அறிவால்
அறிந்து கடவுள்மயம் ஆவார்கள்
என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.

ஆனால், ஜீவகாருணிய ஒழுக்கமென்பது
என்னெனில்
:-

ஜீவர்களுக்குச் ஜீவர்கள் விஷயமாக
உண்டாகின்ற ஆன்ம
உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தல்
 என்று அறிய
வேண்டும்.

ஜீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது
உண்டாகுமெனில்:-

ஜீவர்கள் பசி, தாகம்,
பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை
 இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக்
கண்டபோதாயினும், கேட்ட போதாயினும், இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம
உருக்கம்
 உண்டாகுமென்று அறிய வேண்டும்.

ஜீவகாருணியம் உண்டாவதற்கு உரிமை எது என்னில்:-

ஜீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய
இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வசக்தியுடைய கடவுளால்
சிருஷ்டிக்கப்பட்டபடியால், ஓர் உரிமையுள்ள சகோதரர்களேயாவர் சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால்
துக்கப்படுகின்றபோதும், துக்கப்படுவாரென்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரரென்று
கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது
 சகோதர உரிமையாகலின்,
ஒரு ஜீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படும் என்று அறிந்த போதும்
மற்றொரு ஜீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை என்று அறிய
வேண்டும்.

ஜீவர்கள் துக்கப் படுகின்றதைக்
கண்டபோதும், சிலர் ஜீவகாருணியமில்லாமல் கடின சித்தர்களாயிருக்கின்றார்கள்;
இவர்களுக்குச் சகோதர உரிமை இல்லாமற்போவது ஏனெனில்
:-

துக்கப்படுகின்றவரைத் தமது
சகோதரரென்றும் துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம
அறிவு
 என்கிற கண்ணானது அஞ்ஞானகாசத்தால் மிகவும் ஒளி மழுங்கினபடியாலும்,
அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச
பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்த படியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று.
அதனால், சகோதர
உரிமையிருந்தும் ஜீவகாருணியம் உண்டாகாமல் இருந்தது என்று அறிய வேண்டும்.
இதனால் ஜீவகாருணியம் உள்ளவர் ஆன்ம திருஷ்டி விளக்க உள்ளவர் என்று அறியப்படும்
.

ஜீவர்களுக்குப் பசி,
தாகம், பயம்
 முதலியவற்றால் வரும் துன்பங்களெல்லாம் மனம் கண்
முதலிய கரணேந்திரிய அனுபவங்களல்லது, ஆன்ம அனுபவங்களல்ல
;

அதனால் ஜீவகாருணியங் கொள்வதில்
விசேஷ பிரயோசனம் இல்லையே என்னில்:-

இந்தத் தூலதேகத்தில் ஜீவனாக
இருக்கிற ஆன்மாவும் அறிவுக்கறிவாயிருக்கிற கடவுள் இயற்கை விளக்கமுந் தவிர, கரணம்
இந்திரியம் முதலிய மற்றவைகளெல்லாம் கருவிகளாகிய தத்துவசடங்களே அல்லது
சித்துக்களல்ல. ஆகலில் சுகதுக்கங்களைச் சடங்கள் அனுபவிக்க அறியா. செம்மண்
சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது. அதுபோல், மனம் சந்தோஷ’த்தது
துக்கித்தது என்று சொல்லப்படாது. செம்மண்ணினால் தேகவாழ்க்கைக்கு
வீடுகட்டிக்கொள்வது போல, மன முதலான கரணேந்திரியங்களால் ஜீவவாழ்க்கைக்குக் கடவுளால்
கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம் ஒரு சிறிய வீடாகும். இன்பதுன்பங்களை வீட்டிலிருக்கின்றவன்
அனுபவிப்பானல்லது, வீடு அனுபவிக்கமாட்டாது.
அன்றியும் காசத்தினால்
ஒளி மழுங்கப்பட்டு உபநயனங்களாகிய கண்ணாடிகளால் பார்க்கின்ற கண்கள் துன்ப
விஷயத்தைக் கண்டபோது, அக்கண்கள் நீர்சொரியுமே அல்லது, கண்ணாடி நீர் சொரிய
மாட்டாது. ஆகலில் ஆன்ம திருஷ்டிக்கு உபநயனங்களாக இருக்கின்ற மனம் முதலான கருவிகள்
சுகதுக்கங்களை அனுபவிக்க மாட்டா; ஆன்மாவே அனுபவிக்குமென்று அறியவேண்டும்.

ஒரு ஜீவனுக்குச் சுகம்
நேரிட்டபோது மனம் மகிழ்கின்றது; துக்கம் நேரிட்டபோது மனம் தளர்கின்றது; ஆகலில்,
சுகதுக்கங்களை அம்மனம் அனுபவிப்பதாக அறியப்படாதோ என்னில்:-

அறியப் படாது. பளிங்கினாற் செய்த
வீட்டினுள் இருக்கின்ற வீட்டுத் தலைவனுடைய தேகவிளக்கமும் தேகச் சோர்வும் அந்தப்
பளிங்கு வீட்டில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும், கண்களின்
மலர்ச்சியும் சோர்வும் அக்கண்களிலிட்ட உபநயனங்களில் பிரதிபலித்துப் புறத்தில்
தோன்றுவது போலும், சுகதுக்கங்களால் ஆன்மாவுக்கு உண்டாகிற மகிழ்ச்சியும் தளர்வும்
மனம் முதலான கரணேந்திரியங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுகின்றன. ஆகலில்
சுகதுக்கங்கள் ஆன்மாவுக்கே அனுபவமென்றும், சுகதுக்கங்களை அறிந்தனுபவிப்பதற்குக்
கரணேந்திரியங்கள் ஆன்மாவுக்கு உபகாரக் கருவிகளாகுமென்று அறிய வேண்டியது.

கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவர்களில்
அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:-

முன் தேகத்தில் ஜீவகாருணிய
ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த ஜீவர்களாதலால்,
கடவுள் விதித்த அருளாக்கினைப் படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப்
படுகிறார்கள் என்றறிய வேண்டும்.

முன்தேகம் உண்டென்பது எப்படி
யென்னில்:-

ஒரு வீட்டில் குடிக்கூலி
கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி
கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டா
னென்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில்
குடிபோவான் என்றும் அறிவது போல்; இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக்
குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக்
கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய
வேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் ஜீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும்
என்றறியவேண்டும்.

ஜீவர்கள் முன்தேகத்தில் செய்த
பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வரும்
என்பது எப்படியென்னில்:-

ஒரு சமுசாரி முன் குடித்தனஞ்
செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து
அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு
வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து
அவனுடன் பழக்கம் செய்வார்கள். அதுபோல், ஒரு ஜீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி
நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் ஜீவன்
வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து
அந்தச் ஜீவனைச் சேரும் என்று அறிய வேண்டும்.

முன் பிறப்பில் ஜீவகாருணிய
ஒழுக்கத்தை விட்டுத் துன்மார்க்கத்தில் நடந்த ஜீவர்களை இந்தப் பிறப்பில் பசி,
தாகம், பயம் முதலியவற்றால் துக்கப்படச் செய்வது கடவுள் அருளாக்கினை நியதி என்றால்,
அந்தச் ஜீவர்கள் விஷயத்தில் காருணியம் வைத்து ஆகாரம் முதலியவை கொடுத்து அவர்கள் துக்கத்தை
மாற்றுவது கடவுள் அருளாக்கினைக்கு விரோதமாகாதோ என்னில்:-

          
ஆகாது. அரசன் தன் கட்டளைக்கு முழுதும் விரோதித்து, கால்களுக்கு விலங்கிடப் பட்டுச்
சிறைச்சாலையில் இருக்கின்ற பெரிய குற்றவாளிகளுக்கும் தன் சேவகர்களைக் கொண்டு
ஆகாரங்கொடுப்பிக்கின்றான். அதுபோல், கடவுள் தம் கட்டளைக்கு முழுதும் விரோதித்துப் பலவகையால் பந்தம்
செய்யப்பட்டு நரகத்திலிருக்கின்ற பாவிகளுக்கும் தம் பரிவார தேவர்களைக் கொண்டு
ஆகாரங் கொடுப்பிக்கின்றார்.
அரசன் தன் கட்டளைப் படி நடவாமல் வேறுபட்ட
சாதாரண குற்றமுடையவர்களைத் தன்னாலவர்கள் பெறத்தக்க லாபத்தைப் பெறவொட் டாமல்
உத்தியோகத்தினின்றும் நீக்கி அவர்களுக்கு நல்லறிவு வருவிக்கின்ற நிமித்தம்
அவ்விடத்தைவிட்டு வேறிடங்களில் வெளிப்படுத்துகின்றான். அவர்கள் உத்தியோக மிழந்தபடியால்,
சுகபோஜன முதலிய போகங்களை இழந்து ஊர்ப்புறங்களிற் போய் ஆகாரம் முதலியவை குறித்து
அலைந்து வருந்துகின்ற போது, தயவுள்ளவர்கள் கண்டு ஆகார முதலியவை கொடுக்கின்றார்கள்.
அதை அரசன் கேட்ட காலத்திலும் கண்ட காலத்திலும் கொடுத்தவர்களை இரக்கமுள்ள
நல்ல சமுசாரிகளென்று சந்தோஷ’த்து உபசரிக்கின்றானே யல்லது கோபிக்கின்றானில்லை
.
அதுபோல், கடவுள் தம் கட்டளைப்படி நடவாத சாதாரண குற்றமுடைய ஜீவர்களைத் தமது
சத்தியால் அவர்கள் பெறத்தக்க சுகங்களைப் பெறவொட்டாமல் தாம் கொடுத்த சௌக்கிய
புவனபோகங்களை விடுவித்து, அந்தச் ஜீவர்களுக்கு நல்லறிவு வருவிக்கும் நிமித்தம்
அந்தத் தேகத்தினின்றும் நீக்கி வேறொரு தேகத்தில் விடுகின்றார். அந்தச் ஜீவர்கள்
சௌக்கிய புவன போகங்களை இழந்தபடியால், சௌக்கிய போஜன முதலியவற்றை இழந்து வேறு
வேறிடங்களில் ஆகார முதலியவை இல்லாமல் வருந்தும்போது, தயவுள்ளவர்கள் அந்த வருத்தத்தைக்
கண்டு ஆகார முதலியவை கொடுத்தால் அப்படிக் கொடுத்தவர்களை நல்ல இரக்கமுள்ளவர்கள்
மேன்மேலுஞ் சுகத்தையடையக் கடவார்களென்று சந்தோஷ’த்து உபசரிப்பாரல்லது
கோபிக்கமாட்டார். ஆதலால், கடவுள் அருளாக்கினைக்குச் ஜீவர்களிடத்துச் ஜீவர்கள்
காருணியம் வைப்பதே சம்மதவென்று உண்மையாக அறியவேண்டும்.

இந்தச் ஜீவகாருணியத்தால் இகலோக
ஒழுக்கம் வழங்குகின்றது. ஜீவகாருணிய மில்லையாகில், இகலோக ஒழுக்க மெவ்வளவும்
வழங்கமாட்டாதென்று அறியவேண்டும். எப்படியென்னில்:-

 ஜீவகாருணியம் அல்லாதபோது அறிவும், அன்பும்
தோன்றாது; அவை தோன்றாதபோது கண்ணோட்டமும், ஒருமையும், உபகாரமும்
விளங்காது;

அவை விளங்காதபோது வலிய
ஜீவர்களால் எளிய ஜீவர்கள் ஒழுக்கம், பொறாமை முதலானவைகளால் தடைப்பட்டழிந்து போம்
.

பின்பு வலிய ஜீவர்கள் ஒழுக்கங்களும் தாமச
ஒழுக்கங்களாகி ஒருவர் ஒழுக்கத்தால் மற்றொருவர் ஒழுக்கம் மதத்தினால்
சோர்ந்துவிடதில் மாறுபட்டழிந்து போம்.

ஜீவகாருணிய ஒழுக்கம் சிறிது மில்லாத புலி, சிங்கம் முதலிய
மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவேயில்லை அது
போல் ஜீவகாருணிய மில்லாத மனிதர்கள் வழங்குமிடத்திலும் இகலோக ஒழுக்கம்
வழங்கவே மாட்டாது என்று அறியவேண்டும்
.

பரலோக ஒழுக்கமும் ஜீவகாருணியத்தால்
வழங்குகின்றது;
அது இல்லையாயின் பரலோக ஒழுக்கமும் வழங்கமாட்டாது. எப்படியென்னில்;-

ஜீவகாருணியமில்லாத போது
அருள்விளக்கம் தோன்றாது
. அது
தோன்றாதபோது கடவுள் நிலை கைகூடாது. அது கூடாதபோது முத்தியின்பம் ஒருவரும் அடையமாட்டார்கள்.
அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டாது என்று
அறியவேண்டும்.

ஜீவகாருணிய ஒழுக்கம் மிகவும்
வழங்காமையால் துன்மார்க்கப் பிறவியே பெருகி, எங்கும் புல்லொழுக்கங்களே
வழங்குகின்றன. எப்படியென்னில்:-

ஜீவகாருணிய மில்லாத கடின சித்தர்க
ளெல்லாம் அவரவர் கடின செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர்
சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரணியவாசிகளாகவும், சிலர் புலி, கரடி,
சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை, முதலிய துஷ்ட
மிருகங்களாகவும், சிலர் பாம்பு, தேள்
 முதலிய விஷசெந்துக்களாகவும்,
சிலர் முதலை, சுறா முதலிய கடின ஜந்துக்களாகவும் சிலர் காக்கை,
கழுகு
 முதலிய பக்ஷி சண்டாளங்களாகவும், சிலர் எட்டி,
கள்ளி
 முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள்.
ஆதலால், புல்லொழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன என்றறிய வேண்டும்.

ஜீவகாருணியம். கடவுளருளைப் பெறுவதற்கு முக்கிய
சாதனமென்பது அல்லாமல் அந்த அருளின் ஏகதேச விளக்க மென்றும்
 
அறிய
வேண்டும். ஜீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆதலால், அந்த இயற்கைவிளக்கமில்லாத ஜீவர்களுக்குக்
கடவுள் விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாது
.

ஜீவகாருணியத்திற்கு முக்கியமான
லக்ஷியம் எதுவென்னில்:
ஆன்மாக்கள் எல்லாம் இயற்கைஉண்மை ஏகதேசங்களாகவும், இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கறிவாய்
விளங்குதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும்
இருக்கின்றன என்றும்,
அந்த ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரிப்பதற்குப் பூதகாரிய தேகங்களே உரிமையாக
இருக்கின்றன என்றும்,
அந்தத் தேகங்களில் ஆன்மாக்கள் ஜீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்ம விளக்கம் மறைபடும் என்றும்,
அதனால் அருள்விளக்கம் வெளிப்படாதென்றும்,
அப்போது மூடமுண்டாகுமென்றும், அதுவே ஆன்மாக்களுக்குப்
பந்தமாகுமென்றும்
, அது பற்றி அவசியம் பூதகாரிய தேகம் வேண்டுமென்றும்,

பூதகாரிய தேகங்களுக்கு மாயை முதற்காரணம் ஆதலால் அந்த மாயையின்
விகற்ப ஜாலங்களாகிய பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை
 என்பவைகளால்
அந்தத் தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடுமென்றும்,

அப்படி அபாயங்கள் நேரிடாமல் கரணேந்திரிய சகாயங்களைப் பெற்ற தம் அறிவைக் கொண்டு சர்வ ஜாக்கிரதையோடு
முயற்சிசெய்து தடுத்துக் கொள்வதற்குத் தக்க வல்லப சுதந்திரம் ஜீவர்களுக்கு அருளால்
கொடுக்கப்பட்ட தென்றும்,

அந்தச் சுதந்திரத்தைக் கொண்டு ஜீவர்களெல்லாம் தேகங்களிலிருந்து அபாயங்களை
நீக்கி,
 ஆன்மலாபத்தைப் பெறுதற்கு முயற்சி செய்யக் கடவர் என்றும்,

 ஊழ் வகையாலும்அஜாக்கிரதையாலும்பசி,
தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம்,
 கொலை என்பவைகளால்
வரும் அபாயங்களை நிவர்த்தி செய்து கொள்ளமாட்டாமல்
வருந்துகின்ற ஜீவர்கள்
 விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்க
வேண்டுமென்றும், அப்படி நிவர்த்தி செய்விப்பதில் 

அபரஜீவகாருணியம்:

பசியினால் வருந் துன்பமுங் கொலையினால் வருந் துன்பமுந் தவிர மற்றவைகளால்
வருந் துன்பங்களை மாற்றுவது அபரஜீவகாருணிய
 மாதலால்
இவ்வுலக இன்பத்தை மாத்திரம் சிறிதுண்டுபண்ணுமென்றும், 

பரஜீவகாருணியம்:

பசியினால் வருந்துன்பத்தையும் கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி
செய்விப்பது பரஜீவகாருணிய
 மாதலால் இவ்வுலக
இன்பங்களையும் அளவிறந்த சித்தியின்பங்களையும் எக்காலத்து மழியாத
முத்தியின்பத்தையும் அருளாலடையப்படுமென்றும்,

ஊழ்வகையாலும் அஜாக்கிரதையாலும் அன்னிய ஜீவர்களுக்கு நேரிடுகிற
அபாயங்களை நிவர்த்தி செய்விப்பதற்குத் தக்க சுதந்தரமும், அறிவும் இருந்தும் அவ்வாறு செய்யாமல்
வஞ்சித்தவர்களுக்கு இவ்வுலக இன்பத்தோடு மோக்ஷ இன்பத்தை அனுபவிக்கின்ற சுதந்தரம்
அருளால் அடையப்படுவதில்லை
 என்றும்

தற்காலத்தில் அனுபவிக்கின்ற புவன, போக, சுதந்தரங்களையும் இழந்து விடுவரென்றும் கடவுள்
வேதத்தில் விதித்திருக்கின்றபடியால்;

ஊழ்வகையாலும், அஜாக்கிரதையாலும், பசி, கொலை என்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி
செய்துகொள்ளத் தக்க அறிவும், சுதந்தரமுமில்லாத ஜீவர்கள் விஷயத்தில்
அவைகளை நிவர்த்தி செய்விக்கத்தக்க அறிவும் சுதந்திரமுள்ள ஜீவர்கள் வஞ்சியாமல்
தயவினால் நிவர்த்தி செய்விப்பதே ஜீவகாருணியத்திற்கு முக்கியமான
லட்சியமென்றும்
, அதில் சத்தியமாக நம்பிக்கை வைத்துப் பசித்த ஜீவர்களுக்கு
ஆகாரத்தால் பசி நீக்கியும், கொலைப்படும் ஜீவர்களுக்குச்
செய்வகையால் கொலை நீக்கியும், திருப்தி இன்பத்தை உண்டுபண்ணுவதே மேலான
பிரயோஜனம்
 என்றும் அறியவேண்டும்.

பசி, கொலை, பிணி, தாகம், எளிமை,
பயம், இச்சை என்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்விப்பது
விதியாகவிருக்கவும், இவ்விடத்துப் பசியினால் கொலையினாலும் வரும் அபாயங்களை
மாத்திரம் நிவர்த்தி செய்விப்பது விசேஷமென்று குறித்தது என் என்று அறிய வேண்டில்:-

ஜீவகாருணிய ஒழுக்கத்தில் அபரஜீவகாருணிய
மென்றும் பரஜீவகாருணியமென்றும் இருவகை
யாம்.
அவற்றில் பசிநீக்கலும், கொலைநீக்கலும் பரஜீவகாருணியம் ஆதலால்
விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்றறிய வேண்டும்.
அன்றியும் பசியினால் வருந்துகின்ற ஜீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற
தயவுடையவர்கள் தாகம் நீங்குதற்குத் தண்ர் கொடாமலிரார்கள். தண்ணீர் கொடுப்பது
பிரயாசமுமல்ல. தண்ணீர் ஏரி குளம் கால்வாய் முதலான இடத்தும் இருக்கின்றது.
தாகத்தால், மாற்றிக் கொள்ளத்தக்க ஏகதேச அபாயம் நேரிடுமேயல்லது, அதனால் தேகத்திற்கு
ஆனி (மரணம்) நேரிடாது
; பசியினால் மாற்றிக் கொள்ளக்கூடாத கெடுதி தேகத்திற்கு
நேரிடும்.

பசியினால் வரும் துன்பத்தை
நிவர்த்தி செய்விக்கத் தக்க தயவுடையவருக்குப் பிணியினால் வரும் துன்பத்தை
நிவர்த்தி செய்விப்பதற்கு தயவுண்டாகாமல் இராது.
பசி மிகுதியினாலேயே பிணிகள் விருத்தியாகின்றன. ஆகாரப் பக்குவங்களாலேயே
அப்பிணிகள் நீங்குகின்றன. பிணிகளுக்கு வேறு மருந்து கொடுப்பினும், பத்திய ஆகாரமே
தேகம் நிற்பதற்கு அவசியமான ஆதாரமாயிருக்கின்றது.

பிணியோடு தேகத்தை நெடுநாள்
வைத்திருக்கக் கூடும்.
 ஒரு நாளாகிலும் ஆகாரமில்லாமல்
தேகத்தை வைத்திருக்கக் கூடாது.
 பசித்தவர்களுக்கு ஆகாரத்தால் பசி
நீக்குவிக்கின்ற தயவுடையவர்களுக்கு, இச்சையால் வருந் துன்பங்களை
நீக்குவிப்பதற்குத் தயவு வராமலிராது. ஜீவர்களுக்கு உள்ளபடி பசி நேரிடுமாகில்
ஆகாரத்திலல்லது மற்றொன்றிலும் இச்சையே இராது. ஆகாரம் கிடைக்கில் உண்டு பசி
தீர்ந்தவர் தம் இச்சையைச் சிறிய முயற்சிகளால் முடித்துக் கொள்ளவுங்கூடும்; அல்லது
சமாதானஞ் செய்து கொள்ளவுங்கூடும்; இச்சையோடு பல நாள் தேகத்தை
வைத்திருக்கலாம்; பசியோடு ஒரு நாளும் வைத்திருக்க முடியாது.

பசித்த ஜீவர்களுக்கு ஆகாரத்தால்
பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுள்ளவர்களுக்குச் சுதந்தர மற்ற ஜீவர்களது
எளிமையை நீக்கத் தயவுவராமல் இராது. பசியினால் வருந்துகின்ற எளிமைக்கு மேற்பட்ட எளிமையே இல்லை. எளிமையைச் சில
நாள் சென்று மாற்றிக் கொள்ளக் கூடும்;
 பசியை அவ்வாறு மாற்றிக்கொள்ளக் கூடாது.
எளிமையோடு தேகத்தை வைத்திருக்கக் கூடும்; பசியோடு வைத்திருக்க முடியாது. பசியை
நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவருக்குப் பயத்தை நிவர்த்தி செய்விப்பதில்
தயவுவராமல் இராது . பசியினால் வரும் பயத்திற்கும் கொலையினால் வரும் பயத்திற்கும்
மேற்பட்ட பயமேயில்லை. பயத்தை
உபாயத்தால் நீக்கிக் கொள்ளக்கூடும்;
 பசியை உபாயத்தால் நீக்கிக்கொள்ளக் கூடாது.

பயத்தோடு தேகத்தை வைத்திருக்கலாம்; பசியோடு வைத்திருக்கப்படாதுபசியினால்
வரும் அவத்தைகளுந் துன்பங்களும் கொலையினால் வரும்
 அவத்தைகளுந்
துன்பங்களும் தம்முள் ஒத்திருக்கின்றன
 ஆகலால்பசியினால்
வருந் துன்பத்தையும் கொலையினால் வருந்துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பதே ஜீவகாருணியத்திற்கு
முக்கிய லட்சிய மென்றறிய வேண்டும்.

பசியினால் வருந் துன்பத்தை
நீக்குதலும் கொலையினால் வருந்துன்பத்தை நீக்குதலும் ஜீவகாருண்யத்திற்கு முக்கிய
லக்ஷியமாக இருக்கவும், இவ்விடத்தில் பசிநீக்குதலை மாத்திரம் அடிக்கடி
வலியுறுத்துவது என்னெனில்:
–  

ஒரு ஜீவன் பசியினால் கொல்லப்படு
மென்பதை அறிந்து காருணியத்தால் பசியை நீக்கி உயிர், பிழைக்கும்படி செய்பவர்
வேறுவகையால் உயிர்க்கொலை நேரிட்டால் அதற்கிரங்கி அந்தக் கொலையால் வருந் துன்பத்தை
நிவர்த்தி செய்யாமல் இரார்கள்.
கொலையால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்யாதவர்கள் பசியால் வருந்துன்பத்தையும்
நிவர்த்தி செய்விக்கத்தக்க தயவுடையவர்க ளாகார்கள். பசியால் வரும் கொலையை ஆகாரத்தாலன்றி
வேறு வகையால் நிவர்த்தி செய்விக்கப்படாது
;
 பகை முதலியவற்றால்
வருங்கொலையை அநேக உபாயத்தால் நிவர்த்தி செய்விக்கக் கூடுமாதலால், கொலையால்
வரும் துன்பத்தைப் பசியால் வரும் துன்பத்தில் அமைத்து அடிக்கடி வலியுறுத்துகின்றது
என்ற அறிய வேண்டும்
.

அன்றியும், தாகத்தால் வருந்துகின்றவரும், பிணியால் வருந்துகின்றவரும், இச்சையால் வருந்துகின்றவரும், எளிமையால் வருந்துகின்றவரும், பயத்தால் வருந்துகின்றவரும் பசிவருத்த முண்டாகும்போது
அவ்வவ் வருத்தங்களை யெல்லாம் மறந்து பசிவருத்தம் மேற்பட்டு,
ஆகாரம் தேட முயற்சி செய்கின்றார்கள். அன்றி, அரசன் ஆக்கினையால் கொலைக்குற்றம்
பற்றிக் கொலை செய்ய
விதிக்கப்பட்ட குற்றவாளியும் பசிவந்தபோது தன் பயத்தையும், துன்பத்தையும் மறந்து
அந்தப் பசியை மாற்றிக் கொள்ள முயலுகிறான்
. வைத்தியரால் தாம் இறந்துவிடுவது நிச்சயமென்று
தெரிந்துகொண்ட வியாதியாளரும் மூப்பாளரும் பசிவந்தபோது தமது துன்பத்தை மறந்து
பசிநீக்க முயலுகின்றார்கள். பசிக்குத் தயவினால் ஆகாரங் கொடுக்கத் துணிந்தவன் வேறு வகையால் ஜீவர்கள்
இம்சைப் பட்டழிவதற்குச் சம்மதிக்கவே மாட்டான்;
 ஆகலினும் பசியால் வருந்துன்பத்தை
நிவர்த்தி செய்விக்கிற தருமத்தை அடிக்கடி வலியுறுத்துவது
 என்று
அறியவேண்டும்.

பசியினால் வருங் கெடுதி எல்லாச் ஜீவர்களுக்குந்
தேகநாசம் செய்வது உண்மையானால், எல்லாச் ஜீவர்கள் பசியையும் அறிந்து நிவர்த்தி
செய்விக்க வேண்டும்; அப்படி நிவர்த்தி செய்விக்கத் தொடங்கில் கடவுளால்
சிருஷ்டிக்கப்பட்ட தேவர் மனிதர், நரகர், மிருகம், பறவை, ஊர்வன, தாவரம் என்கிற
இவ்வெழுவகைப் பட்ட அளவிறந்த பேதங்களுடைய ஜீவர்களது பசியை அறிந்து நீக்குவது
அசாத்தியமாகுமே யென்னில்:-

தேவர்கள் மனித சுதந்திரத்தினும் மேற்பட்ட சுதந்தரமுடையவர்களாய்த் தங்களுக்கு
நேரிட்ட பசியைத் தங்கள் முயற்சியினாலேயே மாற்றிக் கொள்ளத் தக்க வல்லபமுடையவர்கள்
 ஆதலால் அவர்கள்
பசியைக் குறித்து மற்றவர்கள் யோசிப்பது அவசியமல்ல
 என்றும் தேவர்களுக்கும்
பசி நேர்ந்தால் துன்பமுண்டாகுமே யென்று இரங்குவது மாத்திரம் அவசியமென்றும்
;

நரகர் நாம் பசியாற்றுவிக்கத் தக்க இடங்களில் இல்லாமல் வேறிடங்களி
லிருக்கின்ற படியாலும், நரகர் பசிக்குத் தண்டனைப் பரிவாரங்களால் பசியாற்றுவித்தலாலும், நரகர்
பசியைக் குறித்து யோசிப்பது அவசியமல்லவென்றும், நரகரும் பசி நேரிடில்
வருந்துவார்களேயென்று இரங்குவது மாத்திரம் அவசியம்மென்றும்
;

ஊழ்வகையினால் சிறிதுஞ் சுதந்தர மில்லாத மரம், புல் முதலிய தாவரங்களில் மனிதர்
தங்கள் வாழ்க்கைக்குச் சகாயமாகத் தங்கள் முயற்சியால் விளைவிக்கின்ற தாவர
வர்க்கங்களுக்குப் பசி குறித்து நீர் விடுவது அவசிய மென்றும், மற்றைத்
தாவரவர்க்கங்களெல்லாம் அருள் நியதியின்படி ஆகாரங் கொடுப்பிக்க
உயிர்த்திருக்கின்றன 
ஆதலால் அவைகளுக்கெல்லாம் பசியறிந்து ஆகாரங் கொடுப்பது நமது
சுதந்தரமல்ல கடவுள் சுதந்தரமென்றும்
அவை குறித்து யோசிப்பது அவசியமல்ல வென்றும்ஆகாரமில்லாவிடில்
வருந்துமே யென்று இரங்குதல் மாத்திரம் அவசியமென்றும்;

நிலத்திலும் நீரிலும் ஊருகின்ற உயிர்களுக்கும்,
பறவைகளுக்கும், மிருகங்களுக்கும்
 அவ்வவற்றின் ஊழ்வகைக்குத்
தக்கபடி அருள் நியதி ஆகாரங் கொடுப்பிக்க உண்டு பசியாறுகின்றன வென்றும்
,
அவ்வவைகளுக்குத் தக்க ஆகாரம் அறிந்து கொடுப்பது நமது சுதந்தரமல்ல கடவுள்
சுதந்தர மென்றும்
, அவைகளில் மனிதர் வாழ்க்கைக்குச் சகாயமாகத் தங்கள்
சுதந்தரத்தால் சம்பாதித்துக் கொள்ளுகின்ற பசு, எருது, எருமைகடா, ஆடு, குதிரை
முதலிய சில மிருகங்களுக்கு ஆகாரங் கொடுத்துப் பசியாற்றுதல் அவசியமென்றும்
;
மனிதர்களில் ஆண்மக்கள், பெண்மக்கள் என்றிருவகைப்பட்ட எல்லா மனிதர்களுக்கும்
பசியால் வரும் நஷ்டங்களும், துன்பங்களும் பசி நிவர்த்தியால் வரும் லாபங்களும்,
இன்பங்களும் பொதுவில் ஒரு தன்மையாய் இருந்தாலும், பசியால் வரும் நஷ்டங்களையும்,
துன்பங்களையும்
 மன முதலான அந்தக்கரண விருத்தியினாலும் கண் முதலான
இந்திரியங்களாலும் மிகவும் அறிந்து கொள்கின்ற ஆன்ம அறிவு ஒத்திருத்தலாலும்,
மனிதர்களுக்கு ஊழ்வகையினால் அருள் நியதியின்படி கொடுப்பிக்கின்ற ஆகாரமட்டில்
சீவித்துத் தேகத்தை வைத்திருக்கக் கூடாமையாலும், தங்கள் முயற்சியாலும்,
அறிவாலும், சுதந்தரத்தாலும்
 சம்பாதிக்கின்ற, ஆகாமிய ஆகாரத்தாலும் பசியை
நீக்கித் தேகத்தை வைத்திருக்க வேண்டுமாதலாலும், ஆகாயமியத்தால் சம்பாதிக்கின்ற ஜீவசுதந்தரமுள்ள மனிதர்களுக்கு அருளால்
மிகவுங் கொடுக்கப்பட்ட படியாலும்;

ஊழ்வகையால் ஆகாரம் நேரிடாமல் பசித்து வருந்தும்படியாகவும்; அந்தப்
பசியை நீக்கும் நிமித்தம் ஒருவரையொருவர் எதிர்பார்க்கும் படியாகவும்; அவர்
தயவினால் ஆகாரங் கொடுத்து 
அப்பசியை நீக்கி