அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

திருவருட்பா: திரு உந்தியார் (பாடல்கள்: 4895 – 4904 )

4895
இரவு விடிந்தது இணையடி வாய்த்த

பரவி மகிழ்ந்தேன் என்று உந்தீபற!
பால் அமுது உண்டேன் என்று உந்தீபற!!

4896
பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்த

தொழுது மகிழ்ந்தேன் என்று உந்தீபற!!
தூயவன் ஆனேன் என்று உந்தீபற!!

4897
தூக்கம் தொலைந்தது சூரியன் தோன்றினன்

ஏக்கம் தவிர்ந்தேன் என்று உந்தீபற!
இன்அமுது உண்டேன் என்று உந்தீபற!!

4898
துன்பம் தவிர்ந்தது தூக்கம் தொலைந்தது

இன்பம் கிடைத்தது என்று உந்தீபற!
எண்ணம் பலித்தது என்று உந்தீபற!!

4899
ஞானம் உதித்தது நாதம் ஒலித்தது

தீனம் தவிர்ந்தது என்று உந்தீபற!
சிற்சபை கண்டேன் என்று உந்தீபற!!

4900
திரை அற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று

பரைஒளி ஓங்கிற்று என்று உந்தீபற!
பலித்தது பூசை என்று உந்தீபற!!

4901
உள் இருள் நீங்கிற்று என் உள்ஒளி ஓங்கிற்றுத்

தெள் அமுது உண்டேன் என்று உந்தீபற!
தித்திக்க உண்டேன் என்று உந்தீபற!!

4902
எந்தையை கண்டேன் இடர் எலாம் நீங்கினன்

சிந்தை மகிழ்ந்தேன் என்று உந்தீபற!
சித்திகள் பெற்றேன் என்று உந்தீபற!!

4903
தந்தையைக் கண்டேன் நான் சாகா வரம் பெற்றேன்

சிந்தை களித்தேன் என்று உந்தீபற!
சித்து எலாம் வல்லேன் என்று உந்தீபற!!

4904
முத்தியைப் பெற்றேன் அம் முத்தினில் ஞான

சித்தியை உற்றேன் என்று உந்தீபற!
சித்தனும் ஆனேன் என்று உந்தீபற!!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜